petit mal seizures

சிறு வலிப்புக் கோளாறுகள்

தமிழ் விளக்கம்

பார்க்க: seizure disorders - வலிப்புக் கோளாறுகள் - மூளை மற்றும் நரம்பு செல்களில் தகவல் பரிமாற்றம் செய்வதற்கு அந்தச் செல்களுக்கிடையில் இயல்பாகவே மிகச் சிறிய அளவில் மின்சாரம் உற்பத்தியாகிறது. ஏதாவது ஒரு காரணத்தால் மூளையில் உண்டாகிற அதீத அழுத்தத்தால் இந்த மின்சாரம் அபரிமிதமாக உற்பத்தியாகி, ஒரு மின் புயல் போல் கிளம்புகிறது. அது நரம்புகள் வழியாக உடல் உறுப்புகளுக்குக் கடத்தப்படுகிறது. அப்போது உறுப்புகளின் இயக்கம் மாறுபட்டு, கை, கால்கள் உதறத் தொடங்குகின்றன. இதைத்தான் 'வலிப்பு' என்கிறோம். பூமியின் உள்அடுக்குகளில் உண்டாகிற அதிகப்படியான அதிர்வுகள் நிலநடுக்கத்தை ஏற்படுத்துவதைப்போல், மூளையில் உண்டாகிற மின் அதிர்வுகள் வலிப்புக்குக் காரணமாகின்றன. சுருக்கமாகச் சொன்னால் வலிப்பு என்பது மூளையின் மின் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றம் அல்லது செயலிழப்பு. ஒருவருக்கு வலிப்பு வரும்போது கையும் காலும் வெட்டி வெட்டி இழுக்கும். வாயில் நுரை தள்ளும். கண்கள் மேலே சுழன்று, நாக்கு, பற்களுக்கிடையில் சிக்கி, கடிபட்டு, வாயிலிருந்து ரத்தம் வழியச் சுயநினைவை இழந்து தரையில் கிடப்பார். சில நிமிடங்களில் இது சரியாகி, பாதிக்கப்பட்டவர் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுவார். இந்த ‘நிகழ்வு’க்குப் பெயர் ‘வலிப்பு’ (Fits / Seizures / Convulsions). ஒருவருக்கு இரண்டு முறைக்கு மேல் வலிப்பு வந்திருக்குமானால், அவருக்கு வலிப்பு நோய் (Epilepsy) இருப்பதாகக் கொள்ள வேண்டும். வலிப்பு’ என்பது ஒரு நோயின் அறிகுறி மட்டுமே. இதுவே ஒரு நோயல்ல. மூளை பாதிக்கப்பட்டுள்ளது என்றோ, அதிகக் காய்ச்சல், ரத்தக் கொதிப்பு போன்றவற்றால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்றோ தெரிவிக்கும் அறிகுறியாக வலிப்பு ஏற்படுகிறது.
க்ராண்ட் மால் என்ற வகையான (Grand mal seizures) வலிப்பு காக்கை வலிப்பு எனப்படும். இது உணர்விழப்பு, தலைசுற்றல், பிரக்ஞையின்மை, கைகால் உதறல், தற்காலிகச் சுவாசக் கோளாறுகள், தோல் நிற மாற்றம் போன்ற முன்னறிகுறிகளுடன் (begin with an aura) தோன்றும். வலிப்பு ஒரு நிமிடத்திலிருந்து 30 நிமிடம் வரை நீடிக்கலாம். ஒரு நாளில் பலமுறையோ அல்லது வருடத்திற்கு ஓரிரு முறையோ வரலாம். வலிப்பு நின்ற பிறகு ஆழ்ந்து தூங்குவார்கள். தூங்கி எழுந்தவுடன் சோர்வு, தசை இறுக்கம் தலைவலி போன்ற அறிகுறிகள் தென்படும். பெடிட் மால் என்ற சிறுவலிப்பு (Petit mal seizures) வகையான வலிப்பு, சட்டென்று சடசடவென கண்ணிமைப்பது மற்றும் நினைவிழத்தல் இல்லாமல், ஆனால் சுற்றுப்புறத்தோடு தொடர்விழப்பு போன்ற அறிகுறிகளுடன் ஏற்படும். இது ஒரு மணி நேரத்தில் பலமுறை தோன்றி, ஓரிரு வினாடிகளோ அல்லது ஓரிரு நிமிடங்களோ நீடிக்கும். இந்த வலிப்பு குழந்தைகளுக்கு வரும். ஆனால் வளர்ந்த பிறகு தோன்றாது. உள இயக்க வலிப்பு (Psychomotor seizures) என்பது மூளையின் பக்கவாட்டுக் கோளத்தில் ஏற்படும் பாதிப்பால் ஏற்படும் பகுதியளவு வலிப்பாகும். இதில் உணர்விழப்பு ஏற்படாவிட்டாலும், நாடகத்தனமான உணர்வுடன் அலுப்பு தட்டும் முறையில் ஒரே மாதிரியான தசை இயக்கங்கள் தோன்றும். ஜேக்சோனியன் வலிப்பு என்பது உடலின் ஏதாவதொரு உறுப்பில் கட்டுப்படுத்தமுடியாத தசைத்துடிப்பு ஏற்பட்டு உடலெங்கும் பரவும். தலையில் அடிபடுதல், பிறவியிலேயே மூளை வளர்ச்சிக் குறைபாடு, மூளையில் கட்டி, ரத்தக்கசிவு, ரத்தம் உறைதல், கிருமித் தொற்று, புழுத் தொல்லை, மூளைக் காய்ச்சல், மூளை உறை அழற்சி காய்ச்சல், டெட்டனஸ் போன்றவை வலிப்பு வருவதற்கு முக்கியமான காரணங்கள். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகக் கோளாறுகள் போன்றவையும் வலிப்பு வருவதைத் தூண்டக்கூடியவையே.
வலிப்பு உள்ளவர்களின் உறவினர்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் பரம்பரையாகவும் வலிப்பு வரலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. கர்ப்பிணிகளுக்கு ரத்தக்கொதிப்பு இருந்தால், பிரசவக் காலத்தில் வலிப்பு வருவதுண்டு. பக்கவாதம், மூளையில் ஏற்படும் ரத்தக்குழாய் மாற்றங்கள், அல்சைமர் நோய், ரத்தத்தில் தட்டணுக்கள், சோடியம் அளவு குறைதல் போன்ற காரணங்களால் வயதானவர்களுக்கு வலிப்பு ஏற்படக்கூடும். சிலருக்கு மன உளைச்சல் காரணமாக ‘பொய் வலிப்பு’ (Pseudo seizure) வருவதும் உண்டு. பல நேரம் எந்தக் காரணத்தையும் கண்டுபிடிக்க முடியாத வலிப்புகளே அதிகமாகக் காணப்படும்.
வலிப்பு வந்தவர்களுக்குச் செய்யவேண்டிய முதலுதவிகள். பாதிக்கப்பட்ட நபரின் அருகில் உள்ள அனைத்துப் பொருட்களையும் அப்புறப்படுத்த வேண்டும். மேலும் தலைக்கு அடியில் மென்மையான ஏதாவது ஒரு பொருளை வைக்க வேண்டும். நோயாளிகளின் பற்களுக்கு இடையிலோ அல்லது வாயிலோ எத்தகைய பொருட்களையும் கொடுக்கக்கூடாது. எத்தகைய திரவ உணவுப் பொருட்களையும் கொடுக்கக்கூடாது. மூச்சு இழக்க நேரிட்டால், பாதிக்கப்பட்ட நபரின் சுவாசப் பாதையில் அடைப்பு உள்ளதா என்று பார்ப்பதுடன், நல்ல காற்றோட்ட வசதி செய்ய வேண்டும். மருத்துவ உதவி கிடைக்கும் வரை பரபரப்பு இல்லாத அமைதியான சூழலை பாதிக்கப்பட்ட நபருக்கு ஏற்படுத்தித் தரவேண்டும். பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர் வலிப்பு நின்றவுடன், மயக்க நிலை அல்லது மீண்டும் வலிப்பினாலோ பாதிக்கப்படக்கூடும். முடிந்த வரையில் உடனடியாக பாதிக்கப்பட்ட நபரை மருத்துவரிடம் கொண்டு செல்ல வேண்டும்.

English

See seizure disorders.